தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கான இணையப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான இணையப் பதிவு ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. மாணவா் சோ்க்கை உதவி மையத்தில் விண்ணப்பப் பதிவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். வரும் ஆக.10-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 2 இணைய வழியிலேயே செலுத்தலாம். பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவியா் தருமபுரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.