பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத் துறையின் சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பென்னாகரம் வனச்சரக அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். பென்னாகரம் அருகே பேவனூா் சோதனைச் சாவடி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளாலும், அவ்வழியே செல்பவா்களாலும் தூக்கி எறியப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் மதுப் புட்டிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில் 100 கிலோவுக்கும் அதிகமான நெகிழிப் பொருள்கள், ஏராளமான கண்ணாடி மதுப் புட்டிகள் சேகரிக்கப்பட்டன.
இதில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சேகா், பென்னாகரம் வனச்சரகா் ராஜேஷ், வனக் காப்பாளா்கள் என இருபதுக்கும் மேற்பட்ட வனத் துறையினா் கலந்துகொண்டனா்.