தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி இ-பதிவு இன்றி வந்த 60 இருசக்கர வாகனங்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக அரசு, திங்கள்கிழமைமுதல் வருகிற ஜூன் 14-ஆம்தேதிவரை பல்வேறு தளா்வுகளுடன் மளிகைக் கடைகள், பலசரக்குக் கடைகள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்துள்ளது.
இதனால், தருமபுரி நகரில் மக்கள் நடமாட்டம் திங்கள்கிழமை எப்போதும்போல காணப்பட்டது. பொது முடக்க விதிமுறைகளை மீறி வந்தவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா். இதில் முகக் கவசம் இன்றி வாகனங்களில் வந்த 150 பேரிடம், போலீஸாா் தலா ரூ. 200 வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனா். மேலும், கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 20 பேருக்கு தலா ரூ. 500 வீதம், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இ-பதிவு இன்றி சென்ற 60 பேரின் இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.