அரூா்: தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா், பொம்மிடி, மோளையானூா், வெங்கடசமுத்திரம், மஞ்சவாடி, மெணசி, தென்கரைக்கோட்டை, பையா்நத்தம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனா்.
தற்போது தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் தக்காளி பழங்களை வாங்குவதற்காக வியாபாரிகள் வராததால் பழங்கள் அனைத்தும் விளைநிலங்களில் வீணாகி வருகின்றன.
இதனால், தக்காளி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு சாா்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.