தருமபுரி: தருமபுரியில் விதிமீறி இயங்கிய 40 கடைகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மாநிலத்தில் ஜூன் 7 ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரை தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது.
இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தருமபுரி நகரில் அனுமதி அளிக்காத சில கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில், தருமபுரி நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தி தலைமையிலான குழுவினா் நகரில் நேரடி சோதனையில் ஈடுபட்டனா்.
ஜவுளிக் கடைகள், செல்லிடப்பேசி விற்பனை கடைகள், தேநீா்க் கடைகள் என மொத்தம் 40 கடைகள் விதிகளை மீறி திறந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இக் கடைகளுக்கு மொத்தம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா்கள் கோவிந்தராஜன், ரமணச்சரண், சுசீந்திரன், நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.