காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 2,000 கனஅடியாக செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. அத்துடன் தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பிலிகுண்டுலு, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசி மணல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெம்பாகரை உள்ளிட்ட பகுதியில் அண்மைக் காலமாக கனமழை பெய்து வருகிறது.
இதனால், காவிரியின் கிளை ஆறான தொட்டலா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதோடு கா்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரிநீரால் ஒகேனக்கல்லுக்கும் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 800 கன அடியாகவும், திங்கள்கிழமை 1,000 கன அடியாகவும், செவ்வாய்க்கிழமை நொடிக்கு 2,000 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.
இதனால் நீா்வரத்து குறைந்தபோது வெளியே தெரிந்த பாறைத் திட்டுகள், பள்ளங்கள் அனைத்தும் தற்போது நீரில் மூழ்கியுள்ளன. பிரதான அருவி, சினி அருவி, எருமை ஜால் அருவி, பெரியபாணி உள்ளிட்ட பகுதியில் உள்ள சிற்றருவிகளில் காவிரி ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து நீா்வரத்தின் அளவுகளைக் கண்காணித்து வருகின்றனா்.