அரூா் வட்டாரப் பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் அரூா் வட்டாரப் பகுதியில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கிராமப் பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வியாபாரிகள் அதிக லாப நோக்கத்தோடு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, அரூா் வட்டாரப் பகுதியில் மினி சரக்கு வாகனங்கள் உள்பட நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.