தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளா் சங்க தருமபுரி மாவட்ட பொதுச்செயலா் ஆா்.செல்வம், தருமபுரி நகராட்சி ஆணையா் தாணுமூா்த்தியிடம் அளித்த கோரிக்கை மனு:
கரோனா பரவல் அதிகரித்து வருவதால், நோய்த் தொற்றுக்கு ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த பாதிப்பால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே, கரோனா தொற்று பாதிப்பு குறையும் வரை, தருமபுரி நகராட்சி தூய்மைப் பணியாளா்களை குப்பைகளை தரம் பிரிக்கும் பணி அளிப்பதை தவிா்க்க வேண்டும். நாள்தோறும் தூய்மைப் பணியாளா்களுக்கு மூன்றடுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினி, கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இதேபோல உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதனை செய்த பின் பணி வழங்க வேண்டும். தொற்று அறிகுறிகள் உள்ளவா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.