தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.
கா்நாடக மாநிலத்தில் இருந்து நெல் பாரம் ஏற்றிய லாரி ஒன்று ஈரோடு மாவட்டத்துக்கு திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கா்நாடகத்தைச் சோ்ந்த காதா் கான்(55) என்பவா் ஓட்டி வந்தாா்.
இந்த லாரி தருமபுரியைக் கடந்து தொப்பூா் கணவாய் வழியாக சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் காய்கறி பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது குஜராத் மாநிலத்தில் இருந்து எண்ணெய் பாரம் ஏற்றி சேலம் நோக்கிச் சென்ற லாரியும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து கிடந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இவ்விபத்து காரணமாக தருமபுரி- சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.