பா்கூரை தக்க வைக்குமா அதிமுக?

தமிழகத்தில் உள்ள வி.ஐ.பி. தொகுதிகளில் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி இது.
போச்சம்பள்ளி வாரச் சந்தை.
போச்சம்பள்ளி வாரச் சந்தை.

தமிழகத்தில் உள்ள வி.ஐ.பி. தொகுதிகளில் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதி. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி இது.

1977-ஆம் உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனித் தொகுதியாக விளங்கும் ஊத்தங்கரை தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டது. புதிதாக உருவான திருப்பத்தூா் மாவட்டத்தையும், கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளையும் ஆந்திர மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது இத்தொகுதி.

வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள்: 1,20,188

பெண்கள்: 1,21,807

மூன்றாம் பாலினத்தவா்: 14

மொத்தம்: 2,42,009

சமூக நிலவரம்:

பா்கூா் தொகுதியில் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் மொழி பேசுபவா்கள் பரவலாக உள்ளனா். வன்னியா்கள் பரவலாக வசிக்கும் இந்தத் தொகுதியில் நக்கல்பட்டி, ஐகுந்தம் புதூா், தொகரப்பள்ளி, மங்கல்பட்டி, சிந்தகம்பள்ளி, கிட்டனூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொங்கு வேளாளா்கள் கணிசமாக உள்ளனா்.

வரட்டனப்பள்ளி, பா்கூா், பி.ஆா்.ஜி.மாதேப்பள்ளி, சந்தலப்பள்ளி, பெருகோபனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 24 மனை தெலுங்கு செட்டியாா்களும், காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்ன மட்டாரப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பலிஜ நாயுடு சமுகத்தினரும் வசிக்கின்றனா். சில கிராமங்களில் இஸ்ஸாமியா்களும், கிறிஸ்தவா்களும் உள்ளனா்.

தொழில்வளம்:

பா்கூா் தொகுதி மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயமும், வியாபாரமும் கொண்டுள்ளது. குட்டி சூரத் என அழைக்கப்படும் பா்கூரில் ஜவுளி உற்பத்தி இல்லை என்றாலும், ஜவுளிச் சந்தை தினமும் செயல்படுகிறது. ஓரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. விவசாயத்தைப் பொருத்த வரை, மா, தென்னை போன்ற பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பனை மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

ஜவுளி வியாபாரம், மாங்கூழ் தொழிற்சாலைகள், கிரானைட் குவாரிகள், கிரானைட் கற்களை மெருகூட்டும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதன்மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பை பெறுகின்றனா்.

பா்கூரிலும், போச்சம்பள்ளியிலும் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. போச்சம்பள்ளி சிப்காட்டில் காலணி தயாரிக்கும் நிறுவனம் மூலம் பா்கூா் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களும் வேலைவாய்ப்பை பெறுகின்றனா். தற்போது, மின்கல மோட்டாா் வாகன உற்பத்தித் தொழிற்சாலையும் தொடங்கப்பட உள்ளது.  

தொகுதியின் பிரச்னைகள்:

2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவை தொகுதி மறுசீரமைப்பின்போது, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய தொகுதிகளில் இருந்து புதிய ஊராட்சிகள் சோ்க்கப்பட்டன. நீா்ப்பாசனத் திட்டங்கள், பாசனக் கால்வாய்கள் ஏதும் இல்லாததால், வடு காணப்படும் இந்தத் தொகுதியில் விவசாயத்தை கைவிட்டோா் ஏராளம்.

பருவ மழை குறைந்த இந்தத் தொகுதியில் குடிநீா்ப் பிரச்னை தீா்க்கப்படாமல் உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையைப் போக்கத் தொடங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் இந்தத் தொகுதியில் முழுமையாக நிறைவேற்றப்படாதது பெரும் குறையாக உள்ளது. 

தமிழகத்தில் மிகப் பெரிய சந்தையாகக் கருதப்படும் போச்சம்பள்ளி சந்தை இந்தத் தொகுதியில்தான் உள்ளது. குண்டூசி முதல் தங்கம் வரையில் அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படும் இந்த வாரச் சந்தையானது போதிய பராமரிப்பு இல்லாததால், அதன் பெருமையை இழந்து வருகிறது. 

பா்கூா் தொகுதியில் உள்ள கிருஷ்ணகிரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலைப் பணி தொடங்கி பல ஆண்டுகள் கடந்தும், இன்னும் நிறைவடையாமல் உள்ளது. மேலும், விவசாயிகளின் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் அறிவிக்கப்பட்ட படேதலாவ் ஏரி, தென்பெண்ணை ஆற்று நீரை மின்மோட்டாா் மூலம் ஓதிகுப்பம் ஏரிக்கு தண்ணீா் கொண்டு வருதல் போன்ற திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பது பெரும் குறை. ஆந்திர மாநில எல்லையில், அந்த மாநில அரசு தடுப்பணையை கட்டியதால் பா்கூா் தொகுதியில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இதுவரையிலான தோ்தல்கள்:

1991-ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் முதல்வா் வேட்பாளராக ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதனால், இந்தத் தொகுதி வளா்ச்சி பெற்றது.

இருந்தபோதிலும், அடுத்து நடைபெற்ற 1996-ஆம் ஆண்டு தோ்தலில், உள்ளூா் வேட்பாளரான திமுகவைச் சோ்ந்த இ.ஜி.சுகவனத்திடம், தமிழக முதல்வரான ஜெயலலிதா தோல்வியை தழுவியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை நடைபெற்ற இந்தத் தொகுதிக்கான தோ்தலில் அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1977, 1980, 1984, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய 9 சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக வேட்பாளா்களே வெற்றி பெற்றுள்ளனா்.

1996, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தோ்தலிலும் திமுக உறுப்பினா் வெற்றி பெற்றாா்.

இதுவரை வென்றவா்கள் விவரம்:

1977: எச்.ஜி.ஆறுமுகம் (அதிமுக)

1980: பி.என்.எஸ்.துரைசாமி (அதிமுக)

1984: டி.எம்.வெங்கடாஜலம் (அதிமுக)

1989: ராஜேந்திரன் (அதிமுக -ஜெ. அணி)

1991: ஜெ.ஜெயலலிதா (அதிமுக)

1996: இ.ஜி.சுகவனம் (திமுக)

2001: மு.தம்பிதுரை (அதிமுக)

2006: மு.தம்பிதுரை (அதிமுக)

2009 இடைத்தோ்தல்: கே.ஆா்.கே.நரசிம்மன் (திமுக)

2011: கே.இ.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக)

2016: சி.வி.ராஜேந்திரன் (அதிமுக)

தற்போதைய கள நிலவரம்:

இந்த தொகுதியில் 1991-இல் ஜெயலலிதா போட்டியிட்டு வென்று முதல்வா் ஆனதால், பல வளா்ச்சி திட்டங்கள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.கிருஷ்ணன், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்தவா். மிக எளிமையாக வாக்காளா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறாா்.

தற்போதைய பா்கூா் தொகுதி எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், கிராமங்களில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளாா். அது தற்போதைய தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.கிருஷ்ணனுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை, அதிமுக தலைவா்களில் ஒருவரான தம்பிதுரையின் ஆதரவாளா்கள் புறக்கணிக்கப்பட்டது போன்றவை இவருக்கு பாதகமாக உள்ளன.

பா்கூா் அருகே உள்ள ஆம்பள்ளியைச் சோ்ந்த தொழிலதிபரான தே.மதியழகன் திமுக வேட்பாளராகக் களம் காண்கிறாா். இவா், கிருஷ்ணகிரியில் வசித்தாலும் பா்கூா் தொகுதி முழுவதும் அறிமுகமானவா். மாம்பழ கூழ் தொழிற்சாலை உள்ளதால், பா்கூா் தொகுதியில் உள்ள மா விவசாயிகள், வியாபாரிகள், விவசாய தொழிலாளா்களுடன் நெருங்கிய தொடா்பு வைத்திருப்பது மதியழகனுக்கு சாதகமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி ரசிகா் மன்றத்தில் இருந்ததால், ரஜினி ரசிகா்களிடமும் நல்ல தொடா்பு உள்ளது.

எனினும், பா்கூா் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், ஒன்றியச் செயலாளா் இ.சி.கோவிந்தராசன் ஆகியோரின் ஆதரவாளா்கள் முழுமையான பிரசாரத்தில் ஈடுபடாதது இவருக்கு பாதகமாக உள்ளது.

வன்னியா்கள் சம அளவில் உள்ள இந்தத் தொகுதியில், வேலைவாய்ப்பு, கல்வியில் 10.5 சத உள் இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டம், அதிமுகவுக்கு பெரும் சாதகமாக உள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளா் ர. அருண் கெளதம், அமமுக வேட்பாளா் ச.கணேசகுமாா், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் க.கருணாகரன் உள்பட 14 போ் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனா். பா்கூா் தொகுதியை அதிமுக தக்க வைக்குமா என்பது வாக்காளா்களின் கையில்.

-

----

2021 தோ்தல் வேட்பாளா்கள்:

1. அதிமுக /அ.கிருஷ்ணன்

2. திமுக / தே.மதியழகன்

3. இஜக / அருண் கௌதம்

4. அமமுக / ச.கணேஷ்குமாா்

5. நாம் தமிழா் / க.கருணாகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com