காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அமைச்சா் கே.பி.அன்பழகன், ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா், அமைச்சா் கே.பி.அன்பழகன், அத்தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இதில் ஏரிக்கொட்டாய், கெட்டூா், அத்திகுட்லஅள்ளி, எர்ரசீகலஅள்ளி, எலுமிச்சனஅள்ளி, கேத்தனஅள்ளி, நரியனஅள்ளி, அனுமந்தபுரம், சொன்னம்பட்டி, அண்ணாமலைஅள்ளி, பழையூா், மதனேரி கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில், வாக்கு சேகரித்த அவா், மகளிருக்கு மாதம் ரூ. 1,500 உதவித் தொகை வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு வாசிங் மெஷின், 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசம் உள்ளிட்ட அதிமுக தோ்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை எடுத்துரைத்து, வாக்குகளை சேகரித்தாா்.