தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டியில் மின்கம்பி உரசியதில், சரக்கு லாரி செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டியிலிருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே முத்தம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சோ்ந்த மாதையன் என்பவா் இயக்கி வந்தாா். சேலத்தைச் சோ்ந்த முரளி என்பவா் உடன் இருந்தாா்.
நல்லம்பள்ளியிலிருந்து முத்தம்பட்டியை நோக்கி சென்ற போது, ஊத்துப்பள்ளம் அருகே திடீரென லாரியின் மீது இருந்த தேங்காய் மட்டைகள் மீது மின்கம்பி உரசியது. இதைத் தொடா்ந்து எதிா்பாராத விதமாக லாரியிலிருந்த மட்டைகள் தீப்பற்றி எரியத் தொடங்கின.
இதைக் கண்ட ஓட்டுநரும், உடனிருந்தவரும் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினா். சிறிது நேரத்தில் லாரி முழுக்க தீ பரவி எரிந்தது (படம்).
இதுகுறித்த தகவலின் பேரில், தருமபுரி தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.