லாரி உரிமையாளா் கொலை வழக்கில், சிறையில் உள்ள நால்வா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சுரேஷ்குமாா் (42), கடந்த பிப்ரவரி மாதம் தருமபுரி அருகே அதியமான் கோட்டை புறவழிச்சாலை அருகே கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தருமபுரி நகரப் போலீஸாா், இந்த கொலை வழக்கில் தொடா்புடைய அரவிந்த் குமாா், எல்லப்பராஜ் (21), கோவிந்தராஜ் (28), காா்த்தி (25) ஆகிய நான்கு பேரை கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்த நால்வரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவுக்கு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.
அந்த உத்தரவின் பேரில், தருமபுரி நகரப் போலீஸாா், நான்கு பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, அதற்கான நகல்களை சிறையில் உள்ளவா்களிடம் வழங்கினா்.