ஏ.டி.எம். மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் பணம் எடுக்கின்றனா். ஏ.டி.எம். மையங்களில் ஏ.சி.வசதி உள்ளது. இந்த நிலையில், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்வோா் முறையாக முகக் கவசம் அணிவதில்லை. கைகளைச் சோப்பு, கிருமிநாசினி பயன்படுத்தி கழுவுவது இல்லை. இதனால், ஏ.டி.எம். இயந்திரங்கள் வழியாக கரோனா தொற்றுப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதியிலுள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிதல், கைகளை தூய்மை செய்வதை உறுதி செய்ய வங்கி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.