அரூரில் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் 4 வழிச்சாலையில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பாப்பிரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, அ.பள்ளிப்பட்டி, மாம்பட்டி, அரூா், தீா்த்தமலை உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், மின் நுகா்வோா்கள் வந்து செல்கின்றனா்.
இதைத்தவிர, மின் கட்டணம் செலுத்துதல், மின்சாரத் துறை சாா்ந்த கோரிக்கைகள் தொடா்பாகவும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அரூா் 4 வழிச்சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகம் மிக சிறிய அளவிலான கட்டத்தில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் ஏற்கெனவே தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கியது. தற்போது நிா்வாக வசதிக்காக அரசு கட்டடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயற்பொறியாளா் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், ஊழியா்களும், பொதுமக்களும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில், அரூரில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு தேவையான கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.