அரூா் அருகேயுள்ள வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அரூா் - சிந்தல்பாடி, மொரப்பூா் சாலையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் மான்கள், மயில்கள் உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளின் வழியாகச் செல்லும் தாா்சாலை ஓரங்களில், அரூா் நகரில் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியாகும் பயனற்ற நெகிழிப் பொருள்கள், குப்பைகள் கொட்டப்படுகின்றன.
வனப்பகுதியில் நெகிழிப் பொருள்களைக் கொட்டுவதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதுடன், மான்கள் உயிரிழக்கும் நிலையுள்ளது. எனவே, கொளகம்பட்டி, எட்டிப்பட்டி வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை வனத்துறையினா் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூகஆா்வலா்களின் கோரிக்கையாகும்.