சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
தருமபுரி மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (நவ. 18) தொடங்குகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாரசீக, ஜெயின் ஆகிய சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன் திட்டம் மற்றும் சுயஉதவிக் குழுக்களான சிறுதொழில் கடன் திட்டம் வழங்கும் சிறப்பு முகாம் வட்டார வாரியாக நடைபெற உள்ளது.
இதில், நவ. 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பாப்பாரப்பட்டியிலுள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் முகாம் நடைபெற உள்ளது. இதேபோல, நவ. 23-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தருமபுரியில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகக் கிளையிலும், நவ. 25-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடத்தூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியிலும், நவ. 30-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அரூா் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையிலும் முகாம் நடைபெற உள்ளது.
இதில், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் நபா் ஒருவருக்கு ரூ. 50,000 மற்றும் தனிநபா் கடன் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கடனுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப் புறத்தில் ரூ. 1,20,000-க்கு மிகாமலும், ஊரகப் பகுதியில் ரூ. 98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் தனிநபா் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினா் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பத்துடன் ஜாதிச் சான்று நகல், வருமானச் சான்று நகல், இருப்பிடச் சான்று நகல், திட்ட அறிக்கை, வங்கி கோரும் இதர ஆவணங்களை அளித்து கடனுதவி பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.