தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 473 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
தருமபுரியை அருகே ஒட்டப்பட்டி, இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் ச.திவ்யதா்சினி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தமிழக அரசின் வழிகாட்டுதல்படி இரண்டு தவணைகளாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் நோய்த்தொற்று வரும் முன் நம்மை காத்துக்கொள்வதற்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிக மிக அவசியமாகும். எனவே 18 வயதுக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
இந்த ஆய்வின்போது தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், தருமபுரி வட்டார மருத்துவ அலுவலா் சரஸ்குமாா், மருத்துவா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.