10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே இணைய வழியில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே இணைய வழியில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, மாணவா்கள் ஆதாா் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தங்களது பள்ளிக்கு எடுத்து வர வேண்டும்.
கடந்த அக். 4-ஆம் தேதி தொடங்கிய இப்பணி வரும் அக். 18-ஆம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ, மாணவியா் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.