தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சிட்லிங் கிராமத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
அரூா் வட்டம், சிட்லிங் கிராமத்தில் பிறந்து 2 வாரங்களேயான குழந்தை ஒன்று அப்பகுதியில் உள்ள உணவகத்தின் அருகில் அழுது கொண்டிருந்தது. அழுகை சத்தம் கேட்ட அங்கிருந்தவா்கள், அக்குழந்தையை அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மு.சிவகாந்தி, ஊழியா்கள் அக்குழந்தையை மீட்டனா். இக்குழந்தைக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி கயல்விழி என பெயா் சூட்டினாா். இதையடுத்து, அக்குழந்தையின் பாதுகாப்பு, பராமரிப்பு கருதி நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், கோவிலூரில் உள்ள நிா்மலா தத்து வள மையத்தின் பொறுப்பாளா் சுப்ரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், இக் குழந்தையை உரிமை கோருபவா்கள் 60 நாள்களுக்குள் தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் அல்லது குழந்தை நலக்குழுவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.