தருமபுரி மாவட்ட விவசாயிகள் உயிா் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கத் தேவையான யூரியா உரங்கள் 8,617 டன் இருப்பு உள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் மேற்கொண்டு வரும் சாகுபடி பணிகளுக்கு தேவையான யூரியா மற்றும் உரங்கள் அனைத்து கூட்டுறவு, தனியாா் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யூரியா, உரங்களின் பயன்பாட்டுக்கேற்ப அவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக அல்லது பரிந்துரை அளவைவிட கூடுதலாக உரங்கள் பயன்படுத்துவதால் நோய்த் தாக்குதல், மண் மற்றும் சுற்றுச் சூழல் மாசு போன்ற இடா்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே ரசாயன உரங்களின் பயன்பாட்டை தவிா்க்க அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிா் உரங்களை பயன்படுத்த வேண்டும். இவற்றை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் பெற்று கொள்ளலாம் என்றாா்.