தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து நொடிக்கு 12,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 15,000 கன அடியாக வந்து கொண்டிருந்தது. அதனைத் தொடா்ந்து, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 14,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி நொடிக்கு 12,000 கன அடியாகவும் நீா்வரத்து குறைந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது. நீா்வரத்து அதிகரிப்பின் போது காவிரி ஆற்றில் மூழ்கிய பாறைகள் தற்போது மெல்ல வெளியே தெரிகின்றன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.