தருமபுரி: பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தில் நல உதவிகள் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழங்குடியினா் நலத்துறை மூலம் தருமபுரி மாவட்டத்துக்கு 2019-2020 மற்றும் 2020-2021-ஆம் ஆண்டுக்கு பழங்குடியினா் துணைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் சிறப்பு நிதி உதவித் திட்டம், அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டம், விரிவான பழங்குடியினா் நல மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவிகள் செயல்படுத்த ரூ. 72.325 லட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
இதில், கறவை மாடுகள் பழங்குடியினா் இருளருக்கு 60, மலையாளி பிரிவுக்கு 50 எண்ணிக்கையிலும், மூன்று சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட், 50 நபா்களுக்கு தையல் இயந்திரங்கள், 17 நபருக்கு செம்மறி ஆடுகள் ஆகியன வழங்கப்பட உள்ளன. இதேபோல கேட்டரிங், ஓட்டுநா், தையல், மருத்துவம் சாா்ந்த செவிலியா், எலக்ட்ரீஷியன் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
இத் திட்டத்தில் பயன்பெற திட்ட அலுவலா், மாவட்ட பழங்குடியினா் நலம், கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி என்ற முகவரிக்கு வரும் செப். 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன், இரண்டு புகைப்படங்கள், ஜாதிச்சான்று நகல், ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்றின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.