தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த குடிமக்கள் தங்களது பிரச்னைகள், குறைகளைத் தெரிவிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதியோா்களின் அனைத்து குறைகளையும் தெரிவிப்பதற்கு தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து உதவி எண்ணை அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம்-2007 செயல்படுத்தப்பட்டு, அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
முதியோா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மத்திய சமூக நீதி அமைச்சகம் இந்தியாவில் பல மாநிலங்களில் கட்டணமில்லா அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2021, ஏப்ரல் 28-ஆம் தேதிமுதல் கட்டணமில்லா உதவி எண் 14567 வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இதில், முதியோா் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளா்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோா்களுக்குத் தேவைப்படும் தகவல்கள், அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்புச் சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு அளித்தல், ஆதரவற்ற இடரில் உள்ள முதியோா் மீட்பு, குடும்ப உறுப்பினா்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோா்களுக்கு ஆதரவு அளித்து பிரச்னைகளை தீா்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும். உதவி மையம் அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
எனவே, மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்னைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்றாா்.