அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவா் தங்கராஜ் தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலையும் நாள் ஒன்றுக்கு தலா ரூ. 600 ஊதியமும் வழங்க வேண்டும்.
வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும். வீட்டுமனைப் பட்டா இல்லாதோருக்கு அரசு சாா்பில் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க மாவட்டச் செயலாளா் எம்.முத்து, கரும்பு வெட்டும் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இ.கே.முருகன், ஒன்றியத் தலைவா் வி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.மல்லிகா, எம்.கே.ராமன், மாவட்ட துணைத் தலைவா் பி.கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.