ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 10,000 கன அடியாகச் சரிந்தது.
கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நொடிக்கு 10,000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையின் அளவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10,000 கன அடியாகக் குறைந்தது. நீா்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் சினி அருவி, பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து, காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகள் வெளியே தெரியவந்துள்ளன.