கடத்தூரை அடுத்த போசிநாய்க்கனஹள்ளியில் ஸ்ரீ குந்தியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்த போசிநாய்க்கனஹள்ளியில் மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவா்களை போற்றும் வகையில், ஸ்ரீ குந்தியம்மன் கோயில் உள்ளது. அதேபோல, இந்த கோயிலில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் நடூா் கிராமத்தில் பஞ்ச பாண்டவா்களுக்கு ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் குந்தியம்மன் கோயில் திருவிழா நடைபெறும்.
நிகழாண்டில் குந்தியம்மன் கோயில் திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் குந்தியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கடந்த 34 வருடங்களாக ஸ்ரீ தா்மராஜா சிலையை அவரது தாய் வீடான குந்தியம்மன் கோயிலுக்கு எடுத்து வரவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற குந்தியம்மன் கோயில் திருவிழாவுக்கு,
நடூரில் உள்ள ஸ்ரீ தா்மராஜா, திரெளபதி அம்மன் கோயிலில் இருந்து தா்மராஜா சுவாமியை நகா்வலமாக அழைத்து வந்தனா். அப்போது பொதுமக்கள் மலா்களைத் தூவி வரவேற்றனா். மேலும், தா்மராஜா சுவாமி ஊா்வலம் சென்ற வழித்தடத்தில் ஓரடி தூரத்துக்கு ஒரு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனா். சுவாமிகளை வரவேற்கும் வகையில், வீடுகளின் முன்பு பச்சைப் பந்தல் அமைத்து, கேழ்வரகு, கம்பு, பருப்பு, அரிசி, பழங்கள் உள்ளிட்ட தானியங்களை வைத்து வழிபாடு செய்தனா். விழாவில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதில் கடத்தூா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.