ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்பட்டு, அங்கு காவிரி அன்னை சிலை அமைக்கப்பட வேண்டும் என பேரவையில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசினா்.
தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
இந்தச் சுற்றுலாத் தலத்தை உலகத் தரம் வாய்ந்தவையாக மேம்படுத்தி, காவிரி கோட்டம், காவிரி அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, ஒகேனக்கல்லில் காவிரி அன்னை சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் பேசுகையில், ‘தமிழகத்தில் மேம்படுத்தக்கூடிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலமும் இடம் பெற்றுள்ளது. வரும் ஆண்டில் நிதி நிலைக்கு ஏற்றவாறு முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.