நல்லம்பள்ளி அருகே கழனிக்காட்டூரில் உள்ள தடுப்பணைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அங்கு உறுதி வாய்ந்த புதிய தடுப்பணைகளை விரைந்து அமைக்க வேண்டும் என தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கேட்டுக் கொண்டாா்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாகா்கூடல் ஊராட்சி, கழனிக்காட்டூா் பகுதியில் ஆறு தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தடுப்பணைகளில் மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீா் நிரம்பி அப்பகுதியில் நீா்மட்டம் உயா்வதற்கும், குடிநீா்த் தட்டுப்பாடுயின்றி கிடைக்கவும் உதவியாக அமைந்திருந்தன. அண்மையில் பெய்த மழையில் தடுப்பணைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில் சனிக்கிழமை அங்கு ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி.வெங்கடேஸ்வரன், விவசாயிகளின் வாழ்வாதாரம், குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் இந்தத் தடுப்பணைகளை உறுதி வாய்ந்ததாக மீண்டும் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின் போது, பாமக மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, ஒன்றியச் செயலாளா் கி.மணி ஆகியோா் உடனிருந்தனா்.