ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
பரிசலில் பயணித்து ஒகேனக்கல்லின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
பரிசலில் பயணித்து ஒகேனக்கல்லின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

வார விடுமுறையில் ஒகேனக்கல் அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். தொடா் விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்து கடவு, பரிசல் துறை, முதலைப்பண்ணை, ஊட்டமலை, ஆலம்பாடி பகுதிகளில் காவிரி கரையோரத்தில் குளித்து மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அந்தப் பகுதியில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் மேற்கொள்ள 2 மணிநேரம் காத்திருந்தனா். அதன்பிறகு சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, கொத்திக்கல், பிரதான அருவி, மணல் மேடு, பெரிய பாணி, மாமரத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ. தொலைவுக்கு கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பரிசல் பயணம் மேற்கொண்டு அருவிகள் மற்றும் பாறைகளைக் கண்டு ரசித்தனா்.

மீன் விற்பனை நிலையங்களில் கட்லா ,ரோகு, கெளுத்தி, வாளை உள்ளிட்ட மீன்களை சுற்றுலாப் பயணிகள் வாங்கி, சமையல் செய்து குடும்பத்துடன் அமா்ந்து உணவருந்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com