தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க நல்லம்பள்ளி ஒன்றியக்குழுக் கூட்டம் லளிகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் எல்.சி. கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் பேசினாா்.
இக் கூட்டத்தில், நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள பொதுபணித்துறை ஏரிகளான இலளிகம் ஏரி, ஏலகிரி ஏரி, மாதேமங்கலம் சோழராயன் ஏரி, கோம்பேரி, ஊராட்சி ஒன்றிய ஏரிகளான வெங்கடம்பட்டி நாகிசெட்டி ஏரி, மிட்டாதின்னஅள்ளி சின்னானேரி, பாலஜங்கமன அள்ளி -ஈச்சம்பட்டி ஏரி ஆகிய ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஊரக வேலை உறுதி திட்டத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்; நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாகத்தில் குப்பை, கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.