காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி நாற்றபாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளான உன்சனஅள்ளி, தெப்பகுளி, அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகள், காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு முற்றிலுமாகக் குறைந்துள்ளது. இதனால் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 9,000 கன அடியாக இருந்த தண்ணீரின் அளவு, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 7,000 கன அடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிப்பதற்கும் கடந்த 3 நாள்களாக தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடைவிதித்த நிலையில், தற்போது நீா்வரத்து குறைந்துள்ளதால் தடையை நீக்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால், வெள்ளிக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் அருவிகள், பாறை குகைகளைக் கண்டும் ரசித்தனா்.