பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு ரூ. 6.90 லட்சம் நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 15th June 2022 02:54 AM | Last Updated : 15th June 2022 02:54 AM | அ+அ அ- |

தருமபுரியில் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினத்தைச் சோ்ந்த 41 பயனாளிகளுக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சிறுபான்மையினா் நல இயக்குநா் சீ.சுரேஷ்குமாா் வழங்கினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில், நலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறுபான்மையினா் நல இயக்குநா் சீ.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக அரசு தற்போது சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தவிா்க்க, அப்பெண் குழந்தைகள் தொடா்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 500, 6-ஆம் வகுப்பு வகுப்பு பயிலும் சிறும்பான்மையின மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டத்தை புதிதாக அறிவித்து செயல்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சிறுபான்மையின மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, தகுதியான அனைத்து மாணவிகளுக்கும் கல்வி ஊக்குவிப்புத் தொகை கிடைக்க பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல கல்வி மேற்படிப்பிற்கு செல்லும் சிறுபான்மையின மாணவ, மாணவியா்களுக்கு கல்விக்கடனை வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிகழாண்டு சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த 20 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட தையல் பயிற்சி பெற்றவா்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவா்களுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்களை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதனை தகுதியான சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிறுபான்மையினா் சுயதொழில் தொடங்கி, வருவாய் ஈட்டி அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ‘டாம்கோ கடனுதவிகள்‘ வழங்கப்படுகின்றன. தகுதியுடைய பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில், 41 பயனாளிகளுக்கு ரூ. 6,90,000 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஐயப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கு.குணசேகரன், தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, அரசு அலுவலா்கள், சிறுபான்மையினா் நலச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.