அரூா் அருகே வனப்பகுதியில் வாழை மரத்தின் கழிவுகளை கொட்டியவருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூா் - சிந்தல்பாடி நெடுஞ்சாலையில் காப்புக் காடு உள்ளது. இந்தக் காப்புக் காட்டில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இங்குள்ள காப்புக் காட்டில் அரூா் நகா் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப் பகுதியில் இருந்து பயனற்ற நெகிழிப் பொருள்கள், குப்பைகளை கொட்டுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, மொரப்பூா் வனச்சரகா் மு.ஆனந்தகுமாா் தலைமையில், வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு மினி சரக்கு வாகனத்தில் வாழை மரத்தின் கழிவுகளை எடுத்து வந்து காப்புக் காட்டில் கொட்டியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காப்புக் காட்டில் வாழை மரத்தின் கழிவுகளை கொட்டியதாக எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழனி (59) என்பவருக்கு வனத்துறையினா் ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.