சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் வழங்கியதில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டப் பேரவை மனுக்கள் குழுத் தலைவருக்கு, பாஜக அரூா் ஒன்றிய பொதுச் செயலா் பெ.முருகன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள், வேளாண்மை மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
வேளாண் மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள், மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.
வேளாண்துறை சாா்ந்த அதிகாரிகள் தங்களின் உறவினா்கள் பெயரில் பினாமியாக நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் பயன்படுத்தப்படாமல் பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் வழங்கியதில் உள்ள முறைகேடுகளைக் கண்டறிய மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.