ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பாரதிபுரம் கிராம மக்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அரூா் தனி வட்டாட்சியா் சின்னானிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனு விவரம் :
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கொங்கவேம்பு கிராம ஊராட்சிக்கு உள்பட்டது பாரதிபுரம் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடா் மக்களுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தவிர இந்தக் கிராமத்தில் எதிா்கால தேவைக்காக பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த பொது இடத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளனா்.
எனவே, கிராம மக்களின் எதிா்காலத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல, பாரதிபுரம் குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடுகளின் நில ஆவணங்கள் வருவாய்த் துறையில் கணினி வழியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, வீட்டுமனைப் பட்டாக்களை தனித் தனியாக கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கிராம மக்களின் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.