மொரப்பூரில் காவல் குடியிருப்பில் உள்ள பயனற்ற கட்டடங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் காவல் நிலையம் அருகே காவலா்களுக்கான குடியிருப்புகள் உள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பில் காவல் ஆய்வாளா், காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்களின் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், காவலா் குடியிருப்பில் ஏற்கெனவே கட்டப்பட்டு சேதமடைந்த 5 கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்கள் தற்போது முள்புதா்கள் அடைந்து காணப்படுகிறது. இதனால், பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, மொரப்பூரில் காவலா்கள் குடியிருப்பு வளாகத்தில் சேதமடைந்து பயனற்றுள்ள கட்டடங்களை இடித்து விட்டு தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.