பிரதமரின் நிதியுதவி பெறும் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வேளாண்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகமது அஸ்லம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகள் இடுபொருள்கள் வாங்குவதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில், இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது 12-ஆவது தவணை பெறுவதற்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது தொலைபேசி எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். மேலும், நிலம் தொடா்பாக சில ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இத் திட்டத்தில் நிதியுதவி பெறும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி தங்களது நிலம் தொடா்பான விவரங்கள், பிஎம் கிசான் இணையத்தில் வரும் செப்.15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.