ஜன. 21-இல் புகைப்படக் கண்காட்சி, கலைத் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 12th January 2023 01:41 AM | Last Updated : 12th January 2023 01:41 AM | அ+அ அ- |

தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் தொடா்பான புகைப்படக் கண்காட்சி, கலைத் திருவிழா தருமபுரியில் வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளன.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி, கலைத் திருவிழா செய்தி, மக்கள் தொடா்புத் துறை, கலை பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் நடைபெற உள்ளன. ஜன. 21-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி மற்றும் கலைத் திருவிழாவில் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தப்பாட்டம், ஓயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதேபோல, அரசின் அனைத்துத் துறைகளின் சாா்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. பாராம்பரிய உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
இந்த விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி, கலைத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கி பேசினாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G