மத்தூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூரை அடுத்த கே.எட்டிப்பட்டி கிராமத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவியர் இந்த மதுக்கடையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்நிலையில், அங்கு மது அருந்துவோர் தகாத வார்த்தைகளில் பேசுவதும், போதையில் சாலையோரங்களில் படுத்துக் கிடப்பதும் அவ்வழியே செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடையே பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம பெண்கள் 500-க்கும் மேற்ப்பட்டோர் திடீரென மதுக்கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளர் அர்ஜுனன், மத்தூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடையை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்த பிறகு மறியல் கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.