கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி ஏதும் கண்டறியப்படவில்லை எனவும், இதுவரை 78 வணிக நிறுவனங்களில் இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தீவிரமாக அரிசி மண்டிகள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகள் என இதுவரை 78 வணிகர் நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் சந்தேகத்தின்பேரில் இரண்டு அரிசி உணவு மாதிரிகள் எடுத்து, சென்னை கிண்டி பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் முடிவுகளும் பிளாஸ்டிக் அரிசி இல்லை எனவும், சாதாரணமாக உள்கொள்ள ஏதுவான அரிசி எனவும் முடிவுகள் வரப்பெற்றுள்ளன.
அத்துடன் பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே அரிசியை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். அதன்படி, தண்ணீரில் அரிசியைப் போட்டால் பிளாஸ்டிக் அரிசியானது மிதக்கும். தண்ணீரில் கொதிக்க வைக்கும்போது, பிளாஸ்டிக அரிசியாக இருந்தால் தண்ணீரில் வெண்படலம் உண்டாகும். அரிசியை தீயிட்டு பரிசோதனை செய்தால் பிளாஸ்டிக் அரிசி இளகி உருகும். எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, அதில் சிறிது அரிசியைப் போட்டால் அது கரையும். இவ்வாறு பொதுமக்கள் வீட்டிலேயே அரிசியை பரிசோதித்து பார்க்கலாம். அத்துடன் இதுகுறித்து ஏற்படும் சந்தேகங்கள், புகார்களை 944440 42322, 04343- 230102 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.