உரங்களை மானியத்தில் பெற ஆதார் எண் அவசியம் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பா.சங்கரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 242 தனியார் சில்லறை உர விநியோகம் மையமும், 124 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளும் விவசாயிகளுக்கு உரங்களை மானியத்தில் வழங்கி வருகின்றன. இந்த சில்லறை விநியோகத்தில் ஏற்படும் தவறுகளை போக்கிட 1.6.2017 முதல் விவசாயிகள் ஆதார் அடையாள அட்டையை உரம் வாங்கும் போது காண்பிக்க வேண்டும். புதிய உரவிற்பனை இயந்திரங்கள் சில்லறை விநியோக மையங்களுக்கு மே 25-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்த சில்லறை உர விநியோக மையங்களின் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் உர விற்பனையை கண்காணிக்கும் வேளாண்மைத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
இந்த நேரடி உரமானிய விநியோகத் திட்டத்தின் மூலம் அனுமதியற்ற பிற தொழில்களுக்கும் மானிய விலையில் உரங்களைப் பெற்று பயன்படுத்துவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். தேவைப்படும் விவசாயிகளுக்கு மட்டுமே மானிய விலையில் உரங்கள் சென்றடையும். நேரடி விநியோகம் செய்யப்பட்ட உரங்களுக்கு உண்டான மானிய தொகை மட்டுமே நேரடியாக நிறுவனங்களுக்கு சென்றடையும்.
இதன் மூலம் வீணாகும் அரசு மானியம் தொகை முழுமையாக தடுக்கப்படும். இந்த மானிய விலை உரத்தை விவசாயிகள் வாங்கும் போது ஆதார் அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும். ரசீது போடும் இயந்திரத்தில் கைரேகை வைக்கப்படல் வேண்டும்.
விவசாயிகளுக்கு மட்டுமே மானியத்தில் உரம் வழங்கப்படும். இந்த வழிகாட்டுதல்கள் அனைத்தும் மத்திய உர அமைச்சகத்தின் ஆணைப்படி மாநில அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.