கர்நாடக மாநிலத்துக்கு நியாய விலைக் கடை அரிசியைக் கடத்திய மினி வேனை பறிமுதல் செய்த தனிப் படையினர், அதன் ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தனி வட்டாட்சியர் (பறக்கும் படை), இளங்கோ, வருவாய் ஆய்வாளர் சலீம் பாஷா ஆகியோர் கொண்ட தனிப் படையினர், கிருஷ்ணகிரியை அடுத்த சிந்தகும்மனப்பள்ளியில் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரூ.81,250 மதிப்பிலான 3.25 டன் நியாய விலைக் கடை அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மினி வேன் ஓட்டுநர் தருமபுரி மாவட்டம், கடகத்தூரைச் சேர்ந்த முனியப்பனிடம் (21) விசாரணை
செய்தனர்.
அதில், தருமபுரி மாவட்டத்திலிருந்து, கர்நாடக மாநிலத்துக்கு நியாய விலைக் கடை அரிசி கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் மினி வேனை பறிமுதல் செய்து, ஓட்டுநர் முனியப்பனை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.