பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளதைத் தொடர்ந்து ஒசூரில் காங்கிரஸ், திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் அவசரக் கூட்டம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமையில் ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).
கூட்டத்தில் திமுக நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு பேசியது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் பந்த் போராட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார். ஒசூரில் முழு கடை அடைப்பு மற்றும் பந்த் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும்.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி, கலால் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும். பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், வர்த்தகர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் மகிவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்துத் தரப்பினரும் தானாக முன்வந்து பந்த் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத், நகரத் தலைவர் நீலகண்டன், மாவட்டச் செயலாளர் முருகன், துணைத் தலைவர் கீர்த்தி கணேசன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுமாதவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் சபரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாதையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.