கிருஷ்ணகிரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில், கேரள மாநில வெள்ள நிவாரண நிதி வரவோலையை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் திங்கள்கிழமை வழங்கினர்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சொத்துகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பலர் நிவாரணப் பொருள்களையும், நிதியையும் வழங்கி வருகின்றனர்.
அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி செய்தியாளர்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட நிதி ரூ.23 ஆயிரத்துக்கான வரைவோலை, 7 சிப்பம் அரிசி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிரஸ் கிளப் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரபி நேரு, பொருளாளர் பாலமுருகன், கௌரவ ஆலோசகர் சாய்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மோகன், மனோஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.