பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த திருமல்வாடி பகுதியில் முட்டை வியாபாரியிடமிருந்து ரூ. 1 லட்சத்து 200 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அருகே ஜெயந்தி காலனியில் ராஜி மகன் பொன்முடி(30) என்பவர் வசித்து வருகிறார். முட்டை வியாபாரம் செய்து வரும் இவர், நாமக்கல்லிருந்து பாலக்கோட்டுக்கு முட்டையை இறக்குமதி செய்து விட்டு, பாப்பாரப்பட்டி வழியாக தருமபுரிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாப்பாரப்பட்டி அருகே திருமல்வாடி பகுதியில் மனோகரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அவ் வழியாக வந்த பொன்முடியின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி அவர் எடுத்து வந்த ரூ. 1 லட்சத்து 200 யை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பென்னாகரம் உதவி தேர்தல் அலுவலர் தேன்மொழியிடம் ஒப்படைத்தனர்.