கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் போலீஸார் கொடி அணிவகுப்பு
மக்களவைத் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில், பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் போலீஸார் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றை அமைதியாகவும், 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்காக ஏப்.16-ஆம் தேதி வருகை தர உள்ளனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன் தொடங்கிய அணிவகுப்பு, பெங்களூரு சாலை, வட்டச் சாலை வழியாகச் சென்றது. இதில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீஸார், சிறப்பு பிரிவு போலீஸார் என 220 பேர்
பங்கேற்றனர்.
காவேரிப்பட்டணத்தில்...
காவேரிப்பட்டணத்தில் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் முன்னிலையில், 200 - க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளான பனகல் தெரு, கொசமேடு, அம்பேத்கர் தெரு, பாலக்கோடு பிரிவு சாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று காவல் நிலையம் அருகே கொடி அணிவகுப்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.
பென்னாகரத்தில்...
பென்னாகரத்தில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ஏப். 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களிலிருந்து போலீஸார் மற்றும் துணை ரானுவத்தினர் வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில், பென்னாகரம் தொகுதியில் தேர்தலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பென்னாகரம் நாகமரை நான்கு சாலை பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, கடைவீதி, பேருந்து நிலையம் மற்றும் அம்பேத்கர் சிலை வரை நடைபெற்றது. இதே போன்று பாப்பாரப்பட்டியிலும் போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் பள்ளியிலிருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு கடைவீதி, பழைய பாப்பாரப்பட்டி வழியாக நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, பென்னாகரம் துணைக் கண்காணிப்பாளர் மேகலா, பென்னாகரம் காவல் ஆய்வாளர் பெரியார் மற்றும் ஏரியூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு, பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் துரைராஜ், கேரள துணை அதிரடிப் படையினர், தமிழ்நாடு சிறப்புப் படை போலீஸார், பென்னாகரம், பாப்பாரப்பாட்டி மற்றும் ஏரியூர் போலீஸார் என 300- க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.