ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் இறுதிக் கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பிரசாரம் இறுதிநாளில் சுமார் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்களில் தி.மு.க.கூட்டணிக் கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணி , ஒசூர் ராயக்கோட்டை சந்திப்பு அருகே திமுக தேர்தல் அலுவலகத்திலிருந்து தொடங்கி ராகவேந்திரா கோயில், நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை , அரசு மருத்துவமனை, தேன்கனிக்கோட்டை சாலை, உள்வட்டச் சாலை, பெரியார் நகர், உழவர் சந்தை, ராயக்கோட்டை சாலை வழியாகத் தேர்தல் அலுவலகத்தில் நிறைடைந்தது.
பேரணியில் வாக்குச்சேகரித்த தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா கூறியது: ஒசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டவுடன் வீட்டு வரி, தொழில் வரி உயர்த்தியுள்ளதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை ஒசூர் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது அதிகமாக விதிக்கப்பட்ட வீட்டுவரியைக் குறைத்தது தி.மு.க. அரசு தான். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் அனைத்து வீடுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஒசூர் ராமநாயக்கன் ஏரி உள்ளிட்ட 150 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஒசூரில் ஜி.எஸ்.டி. வரி கட்ட முடியாமல் மூடியுள்ள 968 தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.டி. பூங்கா திறந்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தப் பேரணியில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். மேற்கு மாவட்டச் செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மாவட்ட துணை அமைப்பாளரும் வேப்பனஅள்ளி எம்.எல்.ஏ.வுமான பி.முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தனலட்சுமி, மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஜெய் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பார்த்த கோட்ட சீனிவாசன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோரா மணி, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.