கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள வேட்டியம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (23). தொழிலாளி. இவர், கிருஷ்ணகிரியில் பயின்று வந்த 17 வயதான கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து, மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, சக்திவேலுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவுற்று செவ்வாய்க்கிழமை நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அதில், மாணவியைக் கடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை, சிறுமியான கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்துக்காக ஓராண்டு சிறை, பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை என மொத்தம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 20 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்குரைஞர் சி.கலையரசி ஆஜரானார்.