கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் , ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்று, தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி வாக்குப் பதிவு ஏப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதன்படி, கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 2,167 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நிறைவு பெற்று, வாக்குப் பதிவுக்குத் தயார் நிலையில் உள்ளன. மேலும், 2,224 வி.வி. பேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 17 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களும், 20 சதவீத வி.வி. பேட் இயந்திரங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், ஒசூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கு 364 வாக்குப் பதிவு இயந்திரங்களும், வி.வி.பேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
இவற்றுடன் வாக்குச் சாவடியின் நுழைவுவாயில் அருகே வைக்கப்படும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் விவரம், வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் அழியாத மை, சீல் வைக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் என 76 பொருள்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தளி, பெத்தமுகிலாளம் போன்ற மலைப் பகுதிகளில் நீண்ட தொலைவில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்களிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் மூலம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கும் முன்பு, வாக்குச் சாவடியில் உள்ள அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் மூலம் ரூ.1,05,76,650 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரூ.83,30,550 சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 22,46,100 குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார்.